
கப்ரு வேதனையைக் குறிப்பிடும் போது அடக்கம் செய்யப்பட்ட இடத்தைக் கூறுவது பெரும்பான்மையைக் கருத்தில் கொண்டே சொல்லப்படுகின்றது. மண்ணுக்குள்ளே தான் அந்த வேதனை நடக்கிறது என்று கருதிக் கொள்ளக் கூடாது. இவ்வாறு நாம் கூறுவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன.
முஸ்லிம்களானாலும், காபிர்களானாலும் அவர்கள் அனைவரும் கப்ருடைய வாழ்வைச் சந்தித்தே தீருவார்கள். காபிர்களும் கப்ரில் வேதனை செய்யப்படுவார்கள் என்பதைப் பல ஹதீஸ்கள் கூறுகின்றன. மண்ணுக்குள் அடக்கம் செய்யப்பட்டவர்கள் மட்டுமே கப்ரில் வேதனை செய்யப்படுகிறார்கள் என்று நாம் கூறினால் பெரும்பாலான காபிர்கள் அந்த வேதனையிலிருந்து விடுதலை பெறுகிறார்கள். ஏனெனில் அவர்கள் மண்ணில் புதைக்காமல் எரித்து சாம்பலாக்கி விடுகின்றனர். காபிர்களுக்கும் கப்ருடைய வேதனை உண்டு என்ற நபிமொழிக்கு இது முரணாக அமைகின்றது.
பாவம் செய்த முஸ்லிம்களை கப்ரில் வேதனை செய்ய இறைவன் காபிர்களுக்கு அத்தகைய வேதனை வழங்க மாட்டான் என்பது இறைவனின் நியதிக்கும் அவனது நியாயத்லிதிற்கும் ஏற்புடையதாக இல்லை.
அவர்கள் திரும்ப எழுப்பப்படும் வரை திரைமறை (வாழ்க்கை) உண்டு. என்ற (அல்குர்ஆன்) வசனப்படி கப்ருடைய வேதனை என்பது ஒரு திரைமறைவு வாழ்க்கை என்பது புரிகிறது. மண்ணுக்குள் தான் அது நடக்க வேண்டும் என்று அர்த்தமில்லை.
மேலும் கப்ரில் ஸாலிஹான நல்லடியார்களும் மிக மோசமானவர்களும் அடுத்தடுத்து அடக்கம் செய்யப்படுகின்றனர். அடக்கம் செய்த இடத்திற்குள்ளேயே வேதனை நடக்கிறது என்றால் அதே இடத்தில் தான் நல்லவர்களும் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஆத்மாக்கள் மரணிக்கும் போதும், மரணிக்காத ஆத்மாக்களை உறக்கத்தின் போதம், அல்லாஹ் கைப்பற்றுகிறான். யாருக்கு மரணத்தை விதித்து விட்டானோ அதைத் தன் வசம் வைத்துக் கொள்கிறான்.
(அல்குர்ஆன் 39:42)
இந்த வசனத்திலிருந்து இறைவன் தன் கைவசம் அனைத்து உயிர்களையும் வைத்துள்ளான் என்பது தெளிவு. நமது புலனுணர்வுக்குத் தென்படாத மற்றொரு உலகத்தில் அந்த ஆத்மாக்களுக்கு அவன் வேதனையோ, சுகமோ வழங்குவான் என்று எடுத்துக் கொண்டால் எவருமே கப்ருடைய வாழ்விலிருந்து தப்பிக்க இயலாது.
கப்ருகளுக்கு நாம் ஸலாம் கூறுவதும், ஸியாரத்துக்குச் செல்வதும் கப்ரில் வேதனை செய்யப்பட்ட இருவரின் அடக்கத்தலத்தில் நபி(ஸல்) அவர்கள் பேரீச்சம்பழ மட்டையைப் பிளந்து ஊன்றியதும் அந்த இடத்திலேயே வேதனை செய்யப்படுகின்றது என்ற கருத்தைத் தருவது உண்மையே. இதை அடிப்படையாக வைத்து மண்ணுக்குள் தான் வேதனை செய்யப்படுகிறது என்று நாம் முடிவு செய்தால் காபிர்கள் அந்த வேதனையிலிருந்து தப்பிக்கும் நிலை ஏற்படுகின்றது.
யார் மண்ணுக்குள் அடக்கம் செய்யப்படுகின்றார்களோ அவர்களின் கப்ரு வாழ்க்கை அடக்கத்தலத்தில் அமையும். யார் அடக்கம் செய்யப்படாமல் வேறு வகையில் மரணிக்கின்றார்களோ அவர்களுக்கு இறைவன் வேறு விதமான கப்ரு வாழ்வை அமைப்பது அவனுக்குச் சிரமமல்ல.கடலில் மீன் தின்று விழுங்கினாலும் கூட தவறு செய்திருந்தால் இறைவனின் வேதனையிலிருந்து தப்பமுடியாது.
அல்லது அனைவருக்குமே மண்ணுலகம் அல்லாத மற்றொரு உலகில் கப்ருடைய வாழ்வை இறைவன் அமைக்கலாம். அடக்கத்தலம் அடையாளமாக இருப்பதால் அடக்கத்தலத்தில் நபி(ஸல்) அவர்கள் பேரீச்ச மட்டைகளை நட்டு வைத்திருக்கலாம். எப்படி வைத்துக் கொண்டாலும் கப்ருடைய வாழ்வி-ருந்து எவரும் விதிவிலக்கு பெற முடியாது என்பதில் சந்தேகமில்லை.