Sunday, June 14, 2009

கடலில் இறந்து போனவர்களுக்கு கப்ரு வேதனை உண்டா?

கடல் பயணத்தில் இறந்தவர்கள் மட்டுமல்ல, உடலை எரித்துச் சாம்பலாக்கி பல பகுதிகளில் தூவி விடப்பட்டவர்கள், மிருகங்களால் அடித்துக் கொல்லப்பட்டு அவற்றுக்கு உணவாகிப் போனவர்கள், ஆகியோருக்கு கப்ரு வேதனை எவ்வாறு? இவர்களுக்கு கப்ரே கிடையாது எனும் போது கப்ரு வேதனை எவ்வாறு இருக்கும்?

கப்ரு வேதனையைக் குறிப்பிடும் போது அடக்கம் செய்யப்பட்ட இடத்தைக் கூறுவது பெரும்பான்மையைக் கருத்தில் கொண்டே சொல்லப்படுகின்றது. மண்ணுக்குள்ளே தான் அந்த வேதனை நடக்கிறது என்று கருதிக் கொள்ளக் கூடாது. இவ்வாறு நாம் கூறுவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன.

முஸ்லிம்களானாலும், காபிர்களானாலும் அவர்கள் அனைவரும் கப்ருடைய வாழ்வைச் சந்தித்தே தீருவார்கள். காபிர்களும் கப்ரில் வேதனை செய்யப்படுவார்கள் என்பதைப் பல ஹதீஸ்கள் கூறுகின்றன. மண்ணுக்குள் அடக்கம் செய்யப்பட்டவர்கள் மட்டுமே கப்ரில் வேதனை செய்யப்படுகிறார்கள் என்று நாம் கூறினால் பெரும்பாலான காபிர்கள் அந்த வேதனையிலிருந்து விடுதலை பெறுகிறார்கள். ஏனெனில் அவர்கள் மண்ணில் புதைக்காமல் எரித்து சாம்பலாக்கி விடுகின்றனர். காபிர்களுக்கும் கப்ருடைய வேதனை உண்டு என்ற நபிமொழிக்கு இது முரணாக அமைகின்றது.
பாவம் செய்த முஸ்லிம்களை கப்ரில் வேதனை செய்ய இறைவன் காபிர்களுக்கு அத்தகைய வேதனை வழங்க மாட்டான் என்பது இறைவனின் நியதிக்கும் அவனது நியாயத்லிதிற்கும் ஏற்புடையதாக இல்லை.

அவர்கள் திரும்ப எழுப்பப்படும் வரை திரைமறை (வாழ்க்கை) உண்டு. என்ற (அல்குர்ஆன்) வசனப்படி கப்ருடைய வேதனை என்பது ஒரு திரைமறைவு வாழ்க்கை என்பது புரிகிறது. மண்ணுக்குள் தான் அது நடக்க வேண்டும் என்று அர்த்தமில்லை.

மேலும் கப்ரில் ஸாலிஹான நல்லடியார்களும் மிக மோசமானவர்களும் அடுத்தடுத்து அடக்கம் செய்யப்படுகின்றனர். அடக்கம் செய்த இடத்திற்குள்ளேயே வேதனை நடக்கிறது என்றால் அதே இடத்தில் தான் நல்லவர்களும் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ஆத்மாக்கள் மரணிக்கும் போதும், மரணிக்காத ஆத்மாக்களை உறக்கத்தின் போதம், அல்லாஹ் கைப்பற்றுகிறான். யாருக்கு மரணத்தை விதித்து விட்டானோ அதைத் தன் வசம் வைத்துக் கொள்கிறான்.
(அல்குர்ஆன் 39:42)

இந்த வசனத்திலிருந்து இறைவன் தன் கைவசம் அனைத்து உயிர்களையும் வைத்துள்ளான் என்பது தெளிவு. நமது புலனுணர்வுக்குத் தென்படாத மற்றொரு உலகத்தில் அந்த ஆத்மாக்களுக்கு அவன் வேதனையோ, சுகமோ வழங்குவான் என்று எடுத்துக் கொண்டால் எவருமே கப்ருடைய வாழ்விலிருந்து தப்பிக்க இயலாது.

கப்ருகளுக்கு நாம் ஸலாம் கூறுவதும், ஸியாரத்துக்குச் செல்வதும் கப்ரில் வேதனை செய்யப்பட்ட இருவரின் அடக்கத்தலத்தில் நபி(ஸல்) அவர்கள் பேரீச்சம்பழ மட்டையைப் பிளந்து ஊன்றியதும் அந்த இடத்திலேயே வேதனை செய்யப்படுகின்றது என்ற கருத்தைத் தருவது உண்மையே. இதை அடிப்படையாக வைத்து மண்ணுக்குள் தான் வேதனை செய்யப்படுகிறது என்று நாம் முடிவு செய்தால் காபிர்கள் அந்த வேதனையிலிருந்து தப்பிக்கும் நிலை ஏற்படுகின்றது.

யார் மண்ணுக்குள் அடக்கம் செய்யப்படுகின்றார்களோ அவர்களின் கப்ரு வாழ்க்கை அடக்கத்தலத்தில் அமையும். யார் அடக்கம் செய்யப்படாமல் வேறு வகையில் மரணிக்கின்றார்களோ அவர்களுக்கு இறைவன் வேறு விதமான கப்ரு வாழ்வை அமைப்பது அவனுக்குச் சிரமமல்ல.கடலில் மீன் தின்று விழுங்கினாலும் கூட தவறு செய்திருந்தால் இறைவனின் வேதனையிலிருந்து தப்பமுடியாது.

அல்லது அனைவருக்குமே மண்ணுலகம் அல்லாத மற்றொரு உலகில் கப்ருடைய வாழ்வை இறைவன் அமைக்கலாம். அடக்கத்தலம் அடையாளமாக இருப்பதால் அடக்கத்தலத்தில் நபி(ஸல்) அவர்கள் பேரீச்ச மட்டைகளை நட்டு வைத்திருக்கலாம். எப்படி வைத்துக் கொண்டாலும் கப்ருடைய வாழ்வி-ருந்து எவரும் விதிவிலக்கு பெற முடியாது என்பதில் சந்தேகமில்லை.

3 comments:

  1. அஸ்ஸலமு அழைக்கும்.... மரணத்திற்கு பின் வேதனை என்பதை என்னுடைய பார்வையில் எப்படி இருக்கும் என்பதை பற்றிய ஒரு சின்ன கற்ப்பனை இதுதான் இறைவன் சொன்னது என்றோ அவனுடைய ரசூல் சொன்னது என்றோ இங்கே நான் சொல்ல வரவில்லை என்னுடைய கற்பனையில் எட்டிய விசயத்தை இங்கே பதிய ஆசைபடுகிறேன்

    அதாவது தூங்குவது என்பது ஒரு சிறு மரணம் போன்றது என்று ஹதீசுகளை நாம் கேள்விபட்டிரிக்கிறோம் அதன் அடிப்படையில் பார்த்தல் உதாரணத்திற்கு நாம் உறங்குகிறோம் என்று வைத்துகொள்வோம் அப்போது நமக்கு ஒரு கனவு வருகிறது அதில் நாம் துன்புறுத்த படுகிறோம் என்றால், இது கனவில் தான் நடக்கிறது என்று நம் சிந்தனைக்கு தெரிவதில்லை மாறாக அதில் உணரப்படும் வலி வேதனைகள் அனைத்தும் நிஜத்தில் நாம் அனுபவிப்பது போன்றுதான் இருக்கும் இது கனவில் தான் நடக்கிறது என்று அப்போது நாம் அறிவதில்லை நாம் தூங்கும்போது நம்மை யாராவது தூக்கிக்கொண்டு வேருஇடதுக்கு கொண்டுபோனாலும் நமக்கு தெரிவதில்லை

    இதன்மூலம ஒரு மனிதன் உணரப்படுவதற்கு அடிப்படை அவன் உடல் வேண்டும் என்பது முக்கியமில்லை மாறாக அவனுடைய நினைவுகளுக்குதான் என்பது நம்மால் உணரமுடிகிறது

    அதே போன்று சில சமயங்களில் நீங்களே அல்லது மற்றவர்கள் சொல்லியோ கேள்விப்ட்டிர்ப்பீர்கள் மனிதனுக்கு மயக்கம் வருகிறது ஏற்படுகிறது அல்லவா அப்போது அவனை நாம் தட்டி எழுப்புவோம் அவன் கன்னத்தில் அடிப்போம் அப்பவும் அவனுக்கு நினைவு திரும்பாது நினைவு திரும்பிய பின்பு அவன் சொல்லுவது "எனக்கு என்ன நடந்ததுன்னு தெரியல எதோ கனவு மாதுரி இருந்தது" என்பான் அது போன்று தான் மனிதனுக்கு மரணம் வரும் அப்போது அவனுக்கு ஒரு கனவு தோன்றும் அந்த கனவில் தான் அவனுடன் இறைவன் கட்டளைப்படி சிலர் பேசுவார்கள் பயமுறுத்துவார்கள் அப்போது அவன் உடலை எரித்தாலும் புதைத்தாலும் மீன்கள் தின்னாலும் சிதைத்தாலும் அவனுடன் நடக்கும் நிகழ்வுகள் நடந்துகொண்டே இருக்கும்

    பின்பு யுக முடிவு நாளைக்கு பின் தீர்ப்புநாளில் அவனுடைய உடல் இறைவனால் மீண்டும் சரிசெய்யப்பட்டு அந்த உடலில் அவன் கனவிளிருது நினைவு திரும்பியவனாக எழுப்ப படுவான் என்பது என் கற்பனையில் உதித்தவைகள்

    ReplyDelete
  2. சகோதரர் குமராலயம் அவர்கள் பெயரால் இந்துவாக இருந்தாலும் இஸ்லாத்தின் கப்ரு வேதனை பற்றி தனக்கு உதித்த கருத்தை ஒரு இஸ்லாமியனை போல் தெளிவாக சொல்லி இருக்கிறார் அருமை.

    ReplyDelete
  3. சகோதரர் நூருல் ஹக் அவர்களுக்கு எனது சலாம் .... எனது ID இன் பெயர் தான் குமராலயம் தவிர நான் மூமீன் தான் என்பதை தெரிவித்து கொள்கிறேன்

    ReplyDelete