Thursday, May 28, 2009

அல்லாஹ் யாரிடத்தும் தேவையற்றவன் என்று திருக்குர்ஆனில் உள்ளது. அப்படி இருக்க ""தொழு! அறுத்துப் பலியிடு" என்ற கட்டளையும் உள்ளதே?


தேவையற்ற இறைவனுக்கு வணக்க வழிபாடு எதற்கு?


அல்லாஹ் எவ்விதத் தேவையுமற்றவன் என்பது இஸ்லாத்தின் முக்கியக் கோட்பாடு என்பதில் சந்தேகமில்லை. தேவையுள்ளவன் கடவுளாக இருப்பதற்குத் தகுதியற்றவன் என்று இஸ்லாம் உறுதிபடக் கூறுகிறது.

இறைவனைத் தொழ வேண்டும் எனவும், இறைவனுக்காக அறுத்துப் ப-யிட வேண்டும் எனவும் இஸ்லாம் கூறுவதால் அல்லாஹ் தேவையுள்ளவன் என்று கருத முடியாது.

இறைவனைத் தொழுவதில்லை என்று உலக மக்கள் அனைவரும் ஏகமனதாக முடிவு செய்தாலும் இறைவனுக்கு எந்தக் குறைவும் ஏற்படப் போவதில்லை. இறைவனை அனைவரும் வணங்க வேண்டும் என்று ஏகமனதாகத் தீர்மானம் போட்டாலும் இறைவனது மதிப்பு இதனால் அதிகமாகி விடப் போவதில்லை. இந்தக் கருத்தில் நபிகள் நாயகத்தின் பொன்மொழியும் உள்ளது. (நூல்: முஸ்லிம் 4674)

தொழுகை உள்ளிட்ட வணக்கங்களை நிறைவேற்றுமாறு இறைவன் கட்டளையிடுவது அவனுக்கு அது தேவை என்பதற்காக அல்ல. மாறாக, நிறைவேற்றும் மனிதனின் நன்மைக்காகவே.

இன்னொருவரின் நன்மைக்காக அவரை ஒரு காரியத்தில் ஈடுபடுமாறு நாம் கூறினால் நமக்கு அந்தக் காரியத்தின் பால் தேவையுள்ளது என்று எடுத்துக் கொள்ள மாட்டோம்.

உங்கள் மகன் பரீட்சையில் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் என்று வற்புறுத்துகிறீர்கள்! போட்டிகளில் அவன் வெற்றி பெற வேண்டும் என்று ஆர்வமூட்டுகிறீர்கள்! இவையெல்லாம் உங்கள் தேவைக்காக அல்ல! மாறாக உங்கள் மகனின் நன்மைக்காகவே இவ்வாறு வலியுறுத்துகிறீர்கள்!

""மகன் நல்ல நிலையில் இருந்தால் நம்மை நன்றாகக் கவனிப்பான்'' என்ற எதிர்பார்ப்பாவது இதில் மறைந்து நிற்கும்.

அல்லாஹ், நம்மிடம் எதிர்பார்க்கும் வணக்க வழிபாடுகளில் இது போன்ற எதிர்பார்ப்புகள் கூட கிடையாது.

எனவே, நமது நன்மைக்காக இடப்படும் கட்டளைகளை கட்டளை பிறப்பித்தவனின் தேவைக்காக இடப்பட்ட கட்டளை என்று கருதுவது தவறாகும்.

Tuesday, May 26, 2009

"தவிடுபொடியான டார்வின் கொள்கை பாதாளக்குழியில் பரிணாம வளர்ச்சி"


மனிதன் குரங்கிலிருந்து பிறந்தானா?


பரிணாம வளர்ச்சியின் மூலம் உருவானவன் தான் மனிதன் என்பது டார்வினின் தத்துவம்.

கடவுளை மறுப்பதற்கு இந்தத் தத்துவம் உதவுவதால் டார்வினின் கொள்கையைச் சிலர் ஏற்றிப் போற்றுகிறார்களே தவிர, அது விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்ட உண்மை அல்ல. வெறும் அனுமானமேயாகும்.

சில உயிரினங்கள் காலப் போக்கில் வேறு உயிரினமாக வளர்ச்சி பெற்று வந்தன. பல கோடி ஆண்டுகளில் குரங்கு என்ற இனமாக ஆனது. அதன் பின்னர் பல கோடி ஆண்டுகளுக்குப் பின் குரங்கு பரிணாம வளர்ச்சி பெற்று மனிதன் என்ற படைப்பு உருவானது என்பது தான் டார்வினின் கொள்கை!

எந்தக் குரங்காவது மனிதனாக மாறியதைப் பார்த்து விட்டு டார்வின் இப்படி முடிவு செய்தானா என்றால் நிச்சயமாக இல்லை.

குரங்குக்கும், மனிதனுக்கும் இடையே உருவ அமைப்பில் மிகுந்த ஒற்றுமை இருப்பது தான் டார்வினின் இந்த அனுமானத்துக்குக் காரணமாக அமைந்தது எனலாம்.

அறிவியல் அறிவு குறைவாக இருந்த காலத்தில் வாழ்ந்தவர்கள் இதை நம்பினால் அதில் ஆச்சர்யம் இல்லை. இன்றைய அறிவியல் உலகில் அதை நம்புவது பைத்தியக்காரத்தனமாகவே இருக்கும்.

உருவ அமைப்பில் வேண்டுமானால் குரங்கு, மனிதனுக்கு நெருக்கமான வடிவம் பெற்றிருக்கலாம்.

ஒரு மனிதனின் இரத்தத்தை இன்னொரு மனிதனுக்குச் செலுத்துகின்ற காலத்தில் நாம் வாழ்கிறோம்.

மனித இரத்தங்கள் கிடைக்காத சூழ்நிலையில் வேறு உயிரினங்களின் இரத்தத்தை மனிதனுக்குச் செலுத்த முடியுமா என்று ஆய்வு செய்தனர்.

குரங்கு உட்பட எந்தப் பிராணியின் இரத்தமும் மனிதனின் இரத்தத்துக்கு நெருக்கமானதாக இல்லை.

பன்றியின் இரத்தம் தான் மனிதனின் இரத்தத்துடன் அதிக அளவு பொருந்திப் போகிறது.

அநேகமாக எதிர்காலத்தில் மனிதனுக்கு பன்றியின் இரத்தம் செலுத்தப்பட முடியும் என்று விஞ்ஞானிகள் முடிவு செய்தாலும் அவ்வாறு செலுத்த முடியாது என்று முடிவு செய்தாலும் எந்த உயிரினங்களின் இரத்தத்தை விடவும் பன்றியின் இரத்தம் மனிதனின் இரத்தத்துக்கு நெருக்கமாகவுள்ளது என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.

மனிதன் குரங்கிலிருந்து பரிணாமம் பெற்றவனாக இருந்தால் குரங்கின் இரத்தம் தான் மனிதனுடைய இரத்தத்துக்கு மிகவும் நெருக்கமானதாக இருக்க வேண்டும். ஆடு, மாடு போன்ற பிராணிகளின் இரத்தம் மனித இரத்தத்திலிருந்து எந்தளவு வேறுபடுகிறதோ அதே அளவுக்கு குரங்கின் இரத்தமும் மனித இரத்தத்திலிருந்து வேறுபட்டுள்ளது.

குரங்கிலிருந்து மனிதன் தோன்றியிருக்கவே முடியாது என்பதற்கு மறுக்க இயலாத சான்றாக இந்தக் கண்டுபிடிப்பு அமைந்துள்ளது.

உருவ அமைப்பை வைத்து எதிலிருந்து பிறந்தான் என்று முடிவு செய்வதை விட அறிவியல் பூர்வமான இந்தக் காரணத்தின் அடிப்படையில் முடிவு செய்வதே சரியானதாகும்.

இன்றைக்கும் கூட தகப்பனின் வடிவத்தில் மகன் இல்லாத போது டி.என்.ஏ. சோதனை மூலம் "இவன் தான் தந்தை' என்று முடிவு செய்கிறோம். வடிவத்தைக் கணக்கில் கொள்வதில்லை.

டார்வின் காலத்தில் இரத்தங்களின் மூலக்கூறுகளை வகைப்படுத்தும் அறிவு இல்லாத போது ஊகமாக அவன் சொன்னதை மன்னிக்கலாம். அறிவியல் வளர்ந்த இந்தக் காலத்திலும் அதைத் தாங்கிப் பிடிப்பது சரி தானா?

இருதய மாற்று அறுவையிலும் இன்று மனிதன் முன்னேறி வருகிறான். இதயம் செயல்பாடில்லாமல் போனால் செயற்கை இதயம் பொருத்தக்கூடிய அளவுக்கு முன்னேறி விட்டான்.

வேறு பிராணிகளின் இதயம் மனிதனுக்குப் பொருந்துமா என்ற ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அவ்வாறு பொருந்தினால் எத்தனையோ இதய நோயாளிகளுக்கு மறுவாழ்வு கிடைக்கும்.

ஒவ்வொரு பிராணியின் இதயத்தையும் ஆராய்ச்சி செய்த போது குரங்கு உட்பட எந்தப் பிராணியின் இதயமும் மனித உடலுக்குப் பொருந்தாது என்பதைக் கண்டறிந்தனர்.

ஆச்சரியமாக பன்றியின் இதயம், மனிதனின் இதயத்துடன் பெருமளவு ஒத்துப் போவதைக் கண்டுபிடித்துள்ளனர். பன்றியின் இதயத்தை மனிதனுக்குப் பொருத்தும் நிலை ஏற்பட்டாலும், அது சாத்தியமற்றது என கண்டுபிடிக்கப்பட்டாலும் மற்ற பிராணிகளின் இதயத்தை விட பன்றியின் இதயம் மனித இதயத்துக்கு நெருக்கமாக இருப்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.

மனிதன் எந்தப் பிராணியிலிருந்தாவது பரிணாமம் பெற்றான் என்று கூறுவதாக இருந்தால் பன்றியிலிருந்து பரிணாமம் பெற்றான் என்று கூறுவதே அதிகப் பொருத்தமாகும்.

டார்வின் கூறுவது போல் உடலமைப்பை அடிப்படையாகக் கொள்வதை விட உள்ளுறுப்புகளின் அமைப்பை அடிப்படையாகக் கொள்வது அறிவியலுக்கு அதிக நெருக்கமுடையதாகும்.

இன்றைய மனிதன் மரபணுச் சோதனையிலும் முன்னேறி விட்டான். ஜீனோம் இரகசியத்தைக் கண்டுபிடித்து விட்டான்.

குரங்கின் மரபணுக்களையும், மனிதனின் மரபணுக்களையும் சோதனை செய்து பார்த்து இரண்டும் ஏறத்தாழ ஒத்திருக்கின்றது என்று நிரூபணம் செய்யப்பட்டிருந்தாலோ, வேறு எந்தப் பிராணியின் மரபணுவும் மனிதனின் மரபணுவுக்கு ஒத்ததாக இல்லை என்று உறுதி செய்யப்பட்டிருந்தாலோ டார்வினின் தத்துவத்தை ஓரளவுக்காவது நம்பலாம். அப்படி எந்த நிரூபணமும் இல்லை.

இன்னும் சொல்வதானால் ஜீனோம் கண்டுபிடிப்புக்குப் பின் முழு மனித குலமும் ஒரு ஆப்பிரிக்கத் தாயிலிருந்து தோன்றியவர்கள் தான் என்பதைக் கண்டுபிடித்து விட்டனர்.

குறிப்பிட்ட கால கட்டத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான குரங்குகள் மனிதர்களாக மாறின என்பது டார்வினின் தத்துவம்.

முழு மனிதனுக்கும் ஒரே தாய் தான் என்ற கண்டுபிடிப்பு டார்வினின் கொள்கையைச் சவக்குழிக்கு அனுப்பி விட்டது.

மனிதன் ஒரு தாய் ஒரு தந்தையிலிருந்து பிறந்தவன் என்ற தத்துவம் உலக சகோதரத்துவத்தை ஏற்படுத்த உதவும். குலம், இனம், நிறத்தின் பெயரால் மனிதனுக்கிடையே ஏற்றத்தாழ்வு கற்பிப்பதைத் தடுக்கும்.

ஆனால் டார்வினின் தத்துவத்தைத் தாங்கிப் பிடிப்பது மனித குலத்துக்குக் கேடு விளைவிக்கும்.

""என்னுடைய முதல் தந்தையும் உன்னுடைய முதல் தந்தையும் வேறு வேறு'' எனக் கூறி இன்று நிலவும் வேறுபாட்டை நியாயப்படுத்த முடியும்.

எனவே உலகுக்குக் கேடு விளைவிக்கும் உளறலே டார்வின் தத்துவம்.

இதையெல்லாம் விட உடல் அமைப்பால் மனிதன் என்ற பெருமையை மனிதன் பெறவில்லை. பகுத்தறிவால் தான் அந்தப் பெருமையைப் பெறுகிறான்.

உடல் வளர்ச்சிக்கும், உடலமைப்பில் மாறுதலுக்கும் தான் டார்வின் காரண காரியங்களைக் கூறுகிறான். பகுத்தறிவு இல்லாத உயிரினம் பகுத்தறிவு உள்ளதாக மாறுவதற்குரிய சூழல் # நிர்ப்பந்தம் எது என்று டார்வின் கூறவே இல்லை.

ஆடு, மாடுகளுக்கு இருப்பது போன்ற கழுத்தைத் தான் ஒட்டகச்சிவிங்கி பெற்று இருந்ததாம்! அதற்குத் தேவையான உணவுகள் உயரமான இடத்தில் இருந்ததால் கழுத்தை நீட்டி, நீட்டி வந்ததாம்! இதனால் படிப்படியாக கழுத்துப் பெரிதாகி பல கோடி வருடங்களில் இப்போது நாம் காண்பது போல் ஒட்டகச் சிவிங்கியின் கழுத்து நீண்டு விட்டதாம்! டார்வினிஸ்டுகள் உளறுகின்றனர்.

உலகில் உயிர் வாழ்வதற்கு நீண்ட கழுத்து அவசியம் என்ற நிர்ப்பந்த நிலையில் ஒட்டகச்சிவிங்கியின் கழுத்து நீண்டு விட்டது என்பதை ஒரு வாதத்துக்காக ஒப்புக் கொள்வோம்.

இந்த வாதத்தின் படி உயிர் வாழ்வதற்கு நீண்ட கழுத்து அவசியம் என்ற நிர்ப்பந்தத்தால் ஒட்டகச்சிவிங்கியின் கழுத்து நீண்டு விட்டது.

ஆனால், பகுத்தறிவு இல்லாத ஜீவன் உயிர் வாழவே முடியாது என்ற நிர்ப்பந்தம் எப்போதாவது இருந்ததா? உயிர் வாழ்வதற்கு பகுத்தறிவு அவசியம் என்ற நிர்ப்பந்தம் எப்போதும் இருந்ததில்லை. உயிர் வாழ்வதற்கு பகுத்தறிவு தேவையே இல்லை.

எனவே பகுத்தறிவு இல்லாத ஜீவன் பகுத்தறிவுள்ள ஜீவனாக மாறுகின்ற எந்த நிர்ப்பந்தமும் எந்தக் காலக் கட்டத்திலும் இருந்ததில்லை. உயிர் வாழ்வதற்கு பகுத்தறிவு அவசியம் இல்லை என்னும் போது பரிணாம வளர்ச்சியினால் பகுத்தறிவு என்பது வரவே முடியாது. இந்தச் சாதாரண அறிவு கூட டார்வினுக்கு இருக்கவில்லை.

ஒட்டகச்சிவிங்கியின் கழுத்து நீண்டதற்கு டார்வின் கூறும் காரணத்தையும் நாம் ஏற்க முடியாது.

யானையின் தும்பிக்கை ஏன் நீண்டது?

கங்காருவின் வயிற்றில் ஏன் பை வந்தது?

யானை மூக்கை நீட்டியதால் தும்பிக்கையாகி விட்டது என்பார்களா?

கடவுளை மறுப்பதற்காக எத்தகைய உளறலையும் தூக்கிப் பிடிப்பது தான் அறிவுடமையா? பரிணாம வளர்ச்சியினால் பல கோடி ஆண்டுகளில் குரங்கு மனிதனாக மாறியது என்றால் அந்த வளர்ச்சி தொடராமல் நின்று போனதற்கு என்ன காரணம்?

தினம் சில குரங்குகள் உலகின் ஏதாவது ஒரு பகுதியில் மனிதனாக மாறிக் கொண்டே இருக்க வேண்டும்; அல்லது தினந்தோறும் சில தாய்க் குரங்குகள் மனிதக் குழந்தைகளைப் பெற்றெடுக்க வேண்டும். ஏன் அது தொடரவில்லை?

இதற்கும் டார்வினிஸ்டுகளிடம் பதில் இல்லை.

மனிதன் பரிணாமம் பெற்று ஏன் இன்னொரு மேல் நிலையை அடையக் காணோம் என்பதற்கும் உளறல் தான் பதிலாகக் கிடைக்கின்றது.
மனிதனின் இரத்தம், இதயம், ஈரல், சிறுநீரகம் போன்ற உள் அமைப்புகளும், மரபணுக்களும் மனிதன் தனி இனம் என்பதையும். எந்த இனத்திலிருந்தும் அவன் பரிணாமம் பெற்றிருக்க முடியாது என்பதையும் சந்தேகமற நிரூபித்த பின்பும் டார்வின் உளறலை தூக்கிப் பிடிப்பவர்கள் சிந்தனையாளர்களாக இருக்க மாட்டார்கள்.


"மனிதர்களே உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்துக் கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் (இறைவனை) அதிகம் அஞ்சுவோரே அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர். அல்லா அறிந்தவன்; நன்கறிபவன்." குர்ஆண் (49:13)

Sunday, May 24, 2009

இன்றைய நவீன மருத்துவ உலகில் பெண்களை செயற்கை முறையில் கருத்தரிக்க செய்கிறார்களே இது இஸ்லாத்தில் கூடுமா?


செயற்கை முறையில் பெண்ணை கருத்தரிக்க செய்யலாமா?


"உங்கள் மனைவியர் உங்கள் விளைநிலங்களாவர். எனவே, உங்கள் விளைநிலங்களுக்கு நீங்கள் விரும்பியவாறு செல்லுங்கள்.'' (அல்குர்ஆன் 2:223)

இந்த வசனத்தில் பெண்களை இறைவன் விளைநிலங்களுக்கு ஒப்பிட்டுக் கூறுகிறான். விளை நிலங்களில் விதைக்கப்படும் விதைகளை அந்த நிலங்கள் முளைக்கச் செய்வது போல் பெண்களும், ஆண்களிடமிருந்து செலுத்தப்படும் விந்துத் துளியை குழந்தைகளாக வளரச் செய்கின்றனர். இந்தப் பொதுத் தன்மை கருதியே இறைவன் விளைநிலங்களுக்குப் பெண்களை ஒப்பிட்டிருக்க முடியும் என்று தெளிவாக அளியலாம்.

நீங்கள் விரும்பிய விதமாக உங்கள் நிலங்களில் விதைத்துக் கொள்ளலாம் என்று இறைவன் அனுமதிப்பதால் செயற்கை முறையில் கருத்தரிக்கச் செய்வதை தடுக்க முடியாது.

ஆனால் கணவனுடைய விந்தை மாத்திரம் தான் ஒரு பெண்ணுடைய கருவறையில் செலுத்தலாமே தவிர மற்ற எந்த ஆடவனுடைய விந்தையும் செலுத்தக் கூடாது.

""உங்கள் மனைவியர் உங்களுக்கு விளைநிலங்கள்'' என்று இறைவன் கூறுவதி-ருந்து ஒருவன் தனது மனைவியைத் தவிர மற்ற எவரது கருவறையிலும் எந்த முறையில் விதைக்கலாகாது என்பதையும், அது போலவே ஒரு பெண் தன் கணவனது விந்தைத் தவிர மற்ற எந்த ஆடவனுடைய விந்தையும் தனக்குள் விதைத்துக் கொள்ளலாகாது என்பதை தெளிவாக அறிகிறோம்

Saturday, May 23, 2009

இஸ்லாத்தின் பார்வையில் கருணைக் கொலை.


கருணைக் கொலைக் கூடுமா?


போரில் கொல்லுதல், ஒரு சில குற்றவாளிகளை அரசு கொல்லுதல் தவிர வேறு எந்தவிதமான கொலைக்கும் இஸ்லாத்தில் அனுமதி இல்லை. கொலையில் கருணை என்பது பைத்தியக்காரத்தனமாகும்.

ஒருவன் எவ்வளவு தான் துன்பத்தை அனுபவித்தாலும் அவற்றையும் தாங்கிக் கொண்டு வாழவே விரும்புகிறான். ஒருவன் படும் துன்பத்துக்கு இரங்குகிறோம் எனக் கூறி அவனைக் கொல்ல எவருக்கும் உரிமையில்லை.

வறுமையின் பிடியில் சிக்கியவர்கள், பார்வையிழந்தோர் மற்றும் ஏனைய உறுப்புக்களை இழந்தோர் சில சமயம் செத்துவிட்டால் நல்லது என்று கூறிவிடுவார்கள். அவர்களைச் சாகடிக்க வேண்டும் என்பது அதன் பொருளன்று. தனது துன்பம் சாவுக்கு நிகரானது என்று அவர்கள் குறிப்பிடுகின்றனர். மற்றபடி அவர்களும் வாழவே விரும்புகிறார்கள்.

முதியோர்களைக் கவனிக்க விரும்பாதவர்கள், நோயாளிகளைக் கண்டு விலகுவர்கள் தங்களின் இந்தக் கொடூரமான மனப்பான்மையை "கருணைக் கொலை' என்ற போர்வையைப் போர்த்தி மறைக்கிறார்கள். உண்மையில் கொலையில் எந்தக் கருணையும் கிடையாது. முற்றிலும் இது காட்டுமிராண்டித் தனமாகும்.

உங்களில் யாரும் மரணத்தைக் கோரிப் பிரார்த்திக்கக் கூடாது. அப்படிக் கேட்க வேண்டிய நிலையை அடைந்தால், ""இறைவா! வாழ்வது எனக்கு நல்லதென்றால் வாழச் செய்! மரணிப்பது நல்லதென்றால் என்னை மரணிக்கச் செய்'' என்று கேட்கட்டும். இது நபிமொழி.

Monday, May 18, 2009

இஸ்லாத்தின் பார்வையில் இன்சூரன்ஸ்


இஸ்லாம் காப்பீடு (insurance) செய்வதை ஏன் தடுக்கிறது?


இன்ஷ்யூரன்ஸ் என்பது வட்டியை அடிப்படையாகக் கொண்டதாகும். அதன் மூலதனங்கள் யாவும் வட்டி # லேவா # தேவிக்காகவே பயன்படுத்தப்படுகிறது. இதுபோன்ற நிறுவனங்களில் பணியாற்றுவது வட்டிக்குத் துணை செய்வதாகவே கொள்ளப்படும்.

மேலும் இன்ஷ்யூரன்ஸ் என்பது முழுக்க முழுக்க ஒரு சூதாட்டமேயாகும். பலரிடம் பணம் வசூல் செய்து யார் இடையிலே இறந்து விடுகிறானோ அல்லது இழப்புக்கு ஆளாகிறானோ அவனுக்குப் பலரது பணமும் போய்ச் சேருகின்றது.

மற்ற சூதாட்டங்களில் வென்றவன் மற்றவர்களின் பணத்தை அடைகின்றான். இந்த சூதாட்டத்தில், இறந்தவனும், இழந்தவனும் அடைகின்றான். மனிதனுடைய உயிரையும், உடமையையும் பணயமாக வைத்து விளையாடப்படும் சூதாட்டத்திற்கு எந்த முஸ்லிமும் துணை போகக் கூடாது.

""ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும். ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள்.''
(அல்குர்ஆன் 5:90)

Sunday, May 17, 2009

இஸ்லாத்தில் கணவன் இறந்து விட்டால் மணைவி இத்தா இருக்கிறாள் அதே மணைவி இறந்தால் மட்டும் கணவன் இத்தா இருப்பதில்லையே ஏன்?


இஸ்லாம் மார்க்கத்தில் மணைவி இறந்து விட்டால் அடுத்த நாளே கணவன் மறுமணம் செய்து கொள்கிறான்.அது போன்ற சட்டம் பெண்ணிற்கு இல்ல்லையே ஏன்?


ஒரு ஆண் தன் மனைவியை இழந்துவிட்டால் உடனேயே அவன் இன்னொரு திருமணம் செய்ய இஸ்லாம் அனுமதிக்கின்றது. ஒரு பெண் தன் கணவனை இழந்து விட்டால் அவள் அடுத்த நாளே மறுமணம் செய்ய முடியாது. சில நாட்கள் திருமணத்தை ஒத்திப் போட வேண்டும். மறுமணத்தை ஒத்திப்போடும் காலமே இத்தா எனப்படுகின்றது.

எவ்வளவு காலம் திருமணத்தை ஒத்திப்போட வேண்டும் என்பது பல விதங்களில் வித்தியாசப்படும்.

கர்ப்பிணிகள் (மறுமணத்திற்காக) காத்திருக்கும் காலம் அவர்கள் பிரசவிக்கும் வரையிலாகும்.
(அல்குர்ஆன் 65:4)

கணவனை இழக்கும்போது அவள் இரண்டு மாத கர்ப்பிணியாக இருந்தால் அவள் பிரசவிக்கும் வரை (சுமார் எட்டு மாதங்கள்) அவற் மறுமணம் செய்யலாகாது. கணவனை இழக்கும் போது அவள் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தால் அவள் பிரசவிக்கும் வரை (சுமார் ஏழெட்டு நாட்கள்) அவள் மறுமணம் செய்யலாகாது.

கணவனை இழக்கும் சமயத்தில் அவள் கர்ப்பிணியா இல்லையா என்பது தெரியாத நிலையில் இருந்தால் அவள் நான்கு மாதங்களும் பத்து நாட்களும் மறுமணம் செய்யாமல் தாமதப்படுத்த வேண்டும். இந்தக் காலகட்டம் முடியும் போது அவள் கர்ப்பிணியாக இல்லை என்று உறுதியானால் உடனே அவள் திருமணம் செய்து கொள்ளலாம். இந்தக் காலகட்டம் முடிவுறும் போது அவள் கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தால் அவள் பிரசவிக்கும் வரை மீண்டும் திருமணத்தை தாமதப்படுத்த வேண்டும். இந்தச் சட்டங்கள் யாவும் 65:4 வசனத்தையும் 2:234 வசனத்தையும் ஆராய்ந்தால் விளங்கும்.

இந்தக் காலகட்டம் பெண்ணுக்கு வித்தியாசப்படுவதைக் கவனிக்கும் போது இத்தாவின் நோக்கம் என்ன என்பது தெரியும்.

அதாவது ஒருவனுடைய கருவைச் சுமந்து கொண்டு அடுத்தவனை மணக்கக் கூடாது. கரு வளர்கிறதா இல்லையா என்று சந்தேகமான நிலையிலும் அடுத்தவனை மணக்கக் கூடாது. முதல் நிலையில் இறந்தவன் துரோகம் செய்யப்படுகிறான். இரண்டாம் நிலையில் புதிய கணவன் ஏமாற்றப்படுகிறான். எல்லா வகையிலும் ஏமாற்றுவதைத் தடை செய்த இஸ்லாம் இங்கேயும் அதற்குத் தடை விதித்திருக்கின்றது.

ஒருவன் தன் மனைவியுடன் சேர்ந்து அவள் கர்ப்பிணியாக காரணமாக இருக்கிறான். அவளது கருவறையில் வளரும் தனது குழந்தையை அவள் வளர்ப்பால் என்று எதிர்பார்க்கிறாள். அவளும் இதற்கு உடன்பட்டே அவனுடன் இணைகிறாள். இதைப் பச்சையாக சொல்லாவிட்டாலும் திருமண ஒப்பந்தத்திலேயே இது அடங்கி விடுகின்றது.


இந்த நிலையில் அவன் இறந்து விடும்போது அவனது குழந்தையைப் பெற்றெடுப்பதும், அதற்கு இடையூறு ஏற்படாமல் காப்பதும் அவளது கடமையாகின்றது. அவள் கர்ப்பிணியாக உள்ள நிலையில் மற்றொருவனை மணக்கும் போது அந்த குழந்தை பாதுகாப்பற்ற நிலைக்கு வருகிறது.

கர்ப்பிணியா இல்லையா என்று தெரியாத நிலையில் கணவனை இôந்த உடனே அவள் மறுமணம் செய்தால் ஒருவேளை முதல் கணவன் மூலம் குழந்தை உருவாகியிருக்கலாம். இந்த நிலையில் தனக்குச் சம்பந்தமில்லாத குழந்தைக்கு மற்றொருவன் தந்தையாக்கப்படும் மோசடி ஏற்படுகின்றது. இவனது சொத்துக்களுக்கு இவனுக்குப் பிறக்காதவன் வாரிசாகும் நிலை ஏற்படுகின்றது. இது போன்ற நிலையை நீக்கி, உயர்வான நோக்கங்கள் இத்தாவின் பின்னே இருப்பதை சிந்திக்கும் போது விளங்கலாம்.

அப்படியானால் குழந்தை பெற முடியாத முதிர் வயது அடைந்தவளும், கணவனுடன் நீண்ட நாட்கள் உறவு கொள்ளாமல் இருந்தவளும் ஏன் இத்தா இருக்க வேண்டும் என்ற கேள்வி எழக்கூடும்.

"இத்தா' என்றால் மறுமணம் செய்வதை தாமதப்படுத்தும் காலம் என்பதை முன்னரே குறிப்பிட்டோம். முதிர் வயதுடையவள் எப்போதுமே மறுமணம் செய்யப் போவது கிடையாது என்பதால் நான்கு மாதங்கள் பத்து நாட்கள் மறுமணம் செய்யக் கூடாது என்பதால் அவளுக்கு எந்த இடையூறும் கிடையாது.

அவள் மறுமணத்தை விரும்பக் கூடியவளாக இருந்தால் அந்த வயதிலும் அப்போது இந்தக் காலக்கெடு அவசியமாகி விடுகின்றது. இல்லற வாழ்வில் தேற்றம் இருக்கும். அவள் குழந்தை பெறுவதற்கும், முதல் கணவன் மூலம் கருத்தறிப்பதற்கும் சாத்தியம் ஏற்பட்டு விடுகின்றது. இவள் வயதில் முதியவளாக இருந்தாலும் உடற்கட்டிலும் உணர்விலும் முதியவள் அல்ல. "இத்தா' என்பதை இருட்டறையில் அடைந்து கிடப்பது என்று சிலர் விளங்கியதால் கிழவிக்கு ஏன் இத்தா? என்கின்றனர்.

இத்தா என்றால் உடனே மறுமணம் செய்யாமல் தாமதப்படுத்தும் காலமே என்பதை விளங்கிக் கொண்டால் அந்தக் கேள்வி அர்த்தமற்றதாகிவிடும்.

எவராக இருந்தாலும் நான்கு மாதங்கள் பத்து நாட்கள் இத்தா இருக்க வேண்டும் என்ற சட்டம் இல்லாவிட்டால் ஏற்படும் மோசமான விளைவையும் சிந்திக்க வேண்டும்.

உடனேயே மறுமணத்தை விரும்பும் ஒருத்தி, தான் மாதவிடாய் நிற்கும் வயதை அடைந்து விட்டதாக பொய் சொல்லலாம். அதை மறுக்க வழியேதும் இராது. ஏனெனில் இந்தப் பருவம் ஆளுக்கு ஆள் வித்தியாசப்படக்கூடியது.

அல்லது ஒரு பெண் விதிவிலக்காக முதிர் வயதிலும் தாயாகி விடக்கூடும். உலகில் ஆங்காங்கே இது நடக்கத் தான் செய்கிறது. இப்படி விதிவிலக்காக முதல் கணவன் மூலம் முதிர் வயதில் அவள் கருத்தரித்திருந்தால் இரண்டாவது கணவன் ஏமாற்றப்படுகிறான். இதையெல்லாம் தவிர்ப்பதற்காக எவராக இருந்தாலும் நான்கு மாதங்கள் பத்து நாட்கள் "இத்தா' இருக்க வேண்டுமென இஸ்லாம் சட்டத்தைப் பொதுவாக்கியது. கணவனுடன் நீண்ட நாட்களாக உறவு இன்றி இருந்தவள் ஏன் இத்தா இருக்க வேண்டும்? என்ற கேள்வியை எடுத்துக் கொள்வோம். அதுவும் நிரூபிக்க முடியாததாகும். இதில் சலுகை வழங்கினால் அவசரத் திருமணத்திற்கு ஆசைப்படும் பெண் தனக்கு கணவருடன் பல ஆண்டுகள் உறவு கிடையாது என்று கூறலாம். இதை மறுக்க எந்த வழியும் இல்லாது போகும். இது போன்ற ஓட்டைகள் சட்டத்தில் இருந்தால் இந்தச் சட்டம் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுவிடும் என்பதை நாம் விளங்கலாம். இந்தக் காரணங்கள் "அல்லாஹ்வும் அவனது தூதரும் கூறியவை அல்ல. நாம் சிந்திக்கம் போது தோன்றியவை. காரணங்கள் நமக்குத் திருப்தியளிக்காவிட்டாலும், காரணமே நமக்குத் தெரியாவிட்டாலும் இறைச்சட்டங்களுக்கு கட்டுப்பட வேண்டும் என்பதை மறந்து விடக் கூடாது.

"இத்தா' என்றால் மறுமணம் செய்வதைத் தாமதப்படுத்தும் காலம் என்பதை முன்பே நாம் கூறியுள்ளோம். அவள் மறுமணம் செய்யாமலும், அந்தக் காலகட்டத்தில் திருமண எண்ணத்தை ஏற்படுத்தும் அலங்காரகங்களைச் செய்யாமலும் இருக்க வேண்டும். அவசியத்தை முன்னிட்டு வெளியே செல்லக் கூடாது என்று எந்தத் தடையும் இல்லை. வீட்டுக்குள்ளே இருட்டறையில் முடங்கிக் கிடக்க வேண்டும் என்பதும் இத்தாவின் அர்த்தமில்லை.

தலாக் விடப்பட்ட பெண்களும் இத்தா இருக்க வேண்டும் என்பதை அனைவரும் அறிவோம். இவர்கள் இந்தக் கட்டத்தில் சர்வ சாதாரணமாக வெளியே வருகின்றனர். ஆனால் கணவன் இறந்த பிறகு இத்தா இருக்கும் போது மார்க்கம் கூறாத கட்டுப்பாடுகளை விதித்து விட்டனர்.
தலாக் விடப்பட்டவர்களுக்கு கணவன் இத்தா காலத்தில் செலவு செய்யக் கடமைப்பட்டுள்ளான். வெளியே செல்வதை அவன் தடுப்பதில் ஓரளவு நியாயம் உண்டு. ஆனால் கணவனை இழந்தவளை அப்படித் தடுக்கத் தேவையில்லை.

அதையே அனுமதிப்பவர்கள் இதை மறுப்பது தான் விந்தையாக உள்ளது. இத்தா இருப்பவள் அவசியத்தை முன்னிட்டு வெளியே செல்வதற்கு எந்தத் தடையும் இல்லை.

Tuesday, May 12, 2009

பள்ளிவாசலுக்காக மாற்று மதத்தவறிடம் நன்கொடை வாங்கலாமா? இஸ்லாத்தில் அதற்க்கு தடை இருக்கின்றதா?

பள்ளிவாசலுக்காக மாற்று மதத்தினரிடம் நன்கொடை வாங்கலாமா?

பள்ளிவாசல்களிலேயே சிறந்த பள்ளிவாசல் கஃபா ஆலயம் தான். சிதிலமடைந்த இந்த ஆலயம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிறுவராக இருந்த போது மீண்டும் புதுப்பித்துக் கட்டப்பட்டது. புதுப்பித்தவர்கள் அனைவரும் பல கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள் தான். அவர்களின் பொருட் செலவில் தான் புதுப்பிக்கப்பட்டது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் சிறு வயதில் அதற்காக மண் சுமந்தனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆட்சியை நிறுவி கஃபா ஆலயத்தையும் கைவசப்படுத்திய போது முஸ்லிமல்லாதவர்களின் பொருட்செலவில் கட்டப்பட்டதால் அதை இடித்துவிட்டு கட்டவில்லை. இடித்துவிட்டு கட்ட நினைத்தால் அது அவர்களுக்கு மிக எளிதாகவே சாத்தியமாகியிருக்கும்.

முஸ்லிமல்லாதவர்களால் கட்டப்பட்ட அந்தப் பள்ளியில் தான் தொழுதார்கள். அங்கு தான் ஹஜ் கடமையை நிறைவேற்றினார்கள்.

காஃபாவை இடித்து விட்டு மீண்டும் கட்டவும் அவர்கள் சிந்தித்ததுண்டு, அதற்கு இப்ராஹீம் நபி அவர்கள் கட்டிய வடிவில் கஃபாவை அவர்கள் கட்டவில்லை என்பதைத் தான் காரணமாகக் கூறினார்களே தவிர முஸ்லிமல்லாதவர்களின் பொருட்களால் கட்டப்பட்டதைக் காரணமாகக் கூறவில்லை.

# இப்ராஹீம் நபி கட்டிய கஃபாவுக்கு இரண்டு வாசல்கள் இருந்தன. நபிகள் நாயகம் (ஸல்) சிறுவராக இருந்த போது கஃபாவைக் கட்டியவர்கள் ஒரு வாசலுடன் கட்டி முடித்திருந்தார்கள்.

# இப்ராஹீம் நபியின் கஃபா மூன்று பக்கம் நேராகவும், ஒருபக்கம் அரை வட்டமாகவும் இவ்வாறு இருந்தது.

உலகின் மிகச் சிறந்த ஆலயமே முஸ்லிமல்லாதவர்களின் பொருளுதவியால் கட்டப்பட்டிருந்து, அதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தியிருக்கும் போது மற்ற பள்ளிவாசல்களுக்கு பிற மக்களிடம் நன்கொடைகள் பெறுவதில் தவறில்லை.

அதே நேரத்தில் நன்கொடை கொடுத்ததால் இஸ்லாம் அனுமதிக்காத காரியங்களைப் பள்ளிவாசளில் செய்ய நிர்பந்தம் செய்வார்கள் என்றிருந்தால் அந்தக் காரணத்திற்காக தவிர்க்கலாம்.

இன்று அவர்கள் நன்கொடை கொடுத்ததிற்காக நாளை மாற்று மத சகோதரர்களின் ஆலயங்களுக்காக நன்கொடை கேட்டால் நாம் பல தெய்வ கொள்கையை ஆதரிக்க நேரிடும் என்பதால் தவிர்க்கலாம்.


ஒரு வேளை இஸ்லாமிய ஆட்சி நடக்கும் நாடாக இருந்து அங்கே முஸ்லிமல்லாத மக்கள் வாழ்வார்களேயானால் அவர்களுக்கு அவர்களின் வழிபாட்டு தளங்களை கட்டிக் கொள்ள அந்நாட்டு அரசு அனுமதிக்க வேண்டும் இது தான் நபிகள் நாயகம் கற்றுத் தந்த வழி முறை.


நோன்புக் கஞ்சி ஒரு உணவு தான். அது ஒரு புனிதமான உணவு கிடையாது. மற்றவர்கள் தரும் உணவுப் பொருட்களை எவ்வாறு சாப்பிடலாமோ அவ்வாறு அவர்கள் நோன்புக் கஞ்சி காய்ச்சினால் அதையும் உண்ணலாம். இதற்கு எந்தத் தடையும் இல்லை. ஆனால் அவர்கள் இவ்வாறு உதவினால் மறுமையில் பயன் கிடைக்குமா என்பது தனி விஷயம்.

அகில உலகுக்கும் ஒரே கடவுளைத் தவிர வேறு கடவுள் கிடையாது என்பதை நம்பாமல், யார் எந்த நல்லதைச் செய்தாலும் அதற்கான பலன் இவ்வுலகில் கிடைக்குமே தவிர மறுமையில் சொர்க்கத்தைப் பெற முடியாது. ஒரே ஒரு கடவுள் தான் என்று நம்பாவிட்டால் அந்த ஒரு கடவுளிடம் ஏதும் கிடைக்காது.

Saturday, May 9, 2009

இன்று உலகில் மக்கள் பட்டினியால் செத்து மடிகின்றனர் இவர்களின் உணவுக்கு மட்டும் இறைவன் போறுப்பேற்க்க வில்லையா? குர்ஆன் (11:6) வசனத்திற்கு முறன்படுகிறதே


உணவளிக்க அல்லாஹ் பொறுப்பேற்காத எந்த உயிரினமும் பூமியில் இல்லை. மேலும் அது வசிக்கும் இடத்தையும், சென்று சேருமிடத்தையும் அவன் நன்கறிவான்'' திருக்குர்ஆனில் (11:6) இவ்வாறு கூறப்பட்டுள்ளது. ஆனால் இன்று பட்டினிச் சாவுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றனவே! இது முரண்பாடாக உள்ளதே?

அந்த வசனத்தைச் சரியாகப் புரிந்து கொண்டால் குழப்பம் ஏதும் இருக்காது.

ஒவ்வொருவருடைய உணவுக்கும் இறைவன் பொறுப்பு என்றால், மற்றவர்கள் யாரும் இதற்குப் பொறுப்பாளிகள் அல்லர் என்பதே பொருளாகும். நீங்கள் இன்று வயிறார சாப்பிட்டால் அதை உங்களுக்குத் தந்தவன் இறைவன். நீங்கள் கால் வயிற்றுக்குத் தான் சாப்பிட்டீர்கள் என்றால் அதை வழங்கியவனும் அவனே என்பது தான் இதன் பொருள்.

நீங்கள் புரிந்து கொண்டது போல் புரிந்து கொண்டால் எந்த மனிதனுக்கும் மரணம் வரவே கூடாது. சாப்பாடு கிடைக்காமல் ஒருவர் மரணிக்கிறார் என்றால், அவருக்கு இது வரை உணவு வழங்கியது இறைவன் தான் என்று புரிந்து கொள்ள வேண்டும்.

ஒருவருக்கு நூறு வயதை அல்லாஹ் கொடுத்தால் அது வரை அவருக்கு உணவளித்தது அல்லாஹ் தான். ஒருவருக்கு ஒரு மாதம் வாழ் நாள் என்று அல்லாஹ் தீர்மானித்திருந்தால், அந்த ஒரு மாதம் தான் அவரது உணவுக்கு அல்லாஹ் பொறுப்பாளியாவான். இப்படிப் புரிந்து கொண்டால் எந்தக் குழப்பமும் இல்லை.குர்ஆன் ஒருபோதும் முறண்படாது என்பதும் தெளிவாகும்.

Thursday, May 7, 2009

குளோனிங் முறையில் படைக்கப்பட்ட மனிதர்கள் இறைவனை வணங்க வேண்டுமா?


அல்லாஹ் தான் படைப்பவன் என்றால் மனிதனை இப்போது குளோனிங் முறையில் படைக்கிறார்களே, அவர்கள் எல்லாம் அல்லாஹ்வை வணங்க வேண்டியதில்லையா?


இறைனவன் உயிரினங்களில் ஏற்கனவே படைத்து வைத்துள்ள கோடிக்கணக்கான மரபணுக்களில் ஒன்றை எடுத்து அதை வளர்த்துக் காட்டுவது தான் குளோனிங். இது படைத்தல் ஆகாது.


மண்ணிலிருந்தோ, உலோகத்திலிருந்தோ ஒருயிரணுவையோ, அல்லது மரபணுவையோ படைக்கச் சொல்லுங்கள்! ஒறு எறும்பின் மரபணுவைக் கூட மனிதனால் படைக்க முடியாது.


நான் உங்களிடம் தருகின்ற விதையை தண்ணீர் ஊற்றி வளர்த்தால் நீங்கள் படைத்தவராக மாட்டீர்கள். இறைவன் படைத்து வைத்துள்ளவற்றை மனிதன் கண்டுபிடிக்கிறானே தவிர, மனிதனே எதையும் படைக்க வில்லை.


உயிரணுவும், மரபணுவும் இல்லாத களி மண்ணிலிருந்து அவற்றை அல்லாஹ் எவ்வாறு உருவாக்கினானோ அப்படி உருவாக்கும் போது தான் மனிதன் கடவுளின் வேளையை செய்தான் எனக்கூற முடியும். ஒருக்காலும் இது மனிதனால் முடியவே முடியாது என்பது தான் நிதர்சனமான உண்மை.

Tuesday, May 5, 2009

பல முஸ்லிம்கள் ஒரே தட்டில் ஒன்றிணைந்து சாப்பிடுகிறார்களே இது ஏன்?


இரண்டாயிரம் ஆண்டில் ஒருவருக்குப் போடும் ஊசியை மற்றொருவருக்குப் பயன்படுத்தினால் நோய் வருகிறது எனக் கண்டுபிடிக்கப்பட்ட பின்பும் ஒரே தட்டில் பல முஸ்லிம்கள் ஒன்றினைந்து சாப்பிடுகிறார்களே இது ஏன்?


முதலில் நாம் ஒன்றை நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும். எய்ட்ஸ் நோயைப் பற்றி ஆய்வு செய்த மருத்துவ உலகம் கூறுவது என்னவென்றால் எய்ட்ஸ் நோயாளிகளுடன் ஒன்றாக அமர்ந்து இருப்பதாலோ, அவர்களுடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவதலோ எய்ட்ஸ் தொற்றாது என்பது மருத்துவ ஆராய்ச்சியின் முடிவாகும். இது தான் உண்மையும் கூட.


எய்ட்ஸ் நோயாளியுடன் உடலுறவு கொள்வதாலும், எய்ட்ஸ் நோயாளியை முத்தமிடுவதாலும், எய்ட்ஸ் நோயாளி பயன்படுத்திய ஊசியைப் பயன்படுத்துவதாலும், அவரது இரத்தத்தை செலுத்திக் கொள்வதாலும் மட்டுமே எய்ட்ஸ் நோய் தொற்றிக் கொள்கிறது எனக் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.


எனவே ஒரே தட்டில் சாப்பிடும் போதெல்லாம் எய்ட்ஸ் பரவி விடும் என்பது ஏற்கத்தக்கதல்ல என்றாலும் ஒரே தட்டில் சாப்பிட்டுத்தான் ஆக வேண்டும் என இஸ்லாம் கட்டலையாகவும் கூறவில்லை. விரும்பியவர்கள் ஒரே தட்டில் சாப்பிடலாம். இதை விரும்பாதபவர்கள் தனி தட்டிலும் தனியாக சாப்பிடலாம்.


இது தொடர்ந்து செய்ய்யப்பட்டு வருவதன் நோக்கம் என்னவெனில் இஸ்லாத்தின் தனிச்சிறப்பை, சகோதரத்துவத்தை நிலைநாட்டவும், பறை சாற்றவும் தான் முஸ்லிம்கள் இப்படி செய்து வருகிறார்கள். பிற மதத்தவர்கள் கூட இஸ்லாத்தின் சிறப்பைப் பற்றிக் கூறும் போது இஸ்லாத்தில் தீண்டாமை இல்லை. ஏழை பணக்காரன் என்ற ஏற்றத் தாழ்வு கிடையாது. ஒரே வரிசையில் நின்று ஒன்றாகத் தொழுவர்கள். ஒரே தட்டில் சாப்பிடுவார்கள் எனக் கூறக் கேள்விப்படிருப்பீர்கள்.


தீண்டாமை ஒழிய சகோதரத்துவத்தை நிலைநாட்ட எத்தனையோ முயற்சிகள் எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இந்நேரத்தில் முஸ்லிம்கள் செயல் ரீதியாக காட்டுகிறார்கள். இது மனிதர்கள் அனைவரும் சமம் என்பதைக் காட்டும் நிகழ்ச்சியாகும். மனிதர்கள் அனைவரும் சமம் என்கிற போது நான் உயர்ந்தவன், நீ தாழ்ந்தவன் என்ற பிரச்சினை வராது ரத்த ஆறு ஓடாது. ஒன்றாக அமர்ந்து ஒரே தட்டில் சாப்பிடுவது மனிதர்கள் அனைவரும் சமம் என்பதைக் காட்டுவதற்காக தானே தவிற வேறு காரணம் எதுவும் இல்லை.

Sunday, May 3, 2009

இஸ்லாத்தில் ஆடு மாடுகளை அறுத்து பலி இடுவது மிருகவதை அல்லவா?


இஸ்லாம் மிருகவதை பற்றி என்ன சொல்கிறது? ஏன் என்றாள் ஆடு, மாடுகளை அறுத்து பலியிடுவது இரக்க குணத்தை இழக்க செய்து விடும்தானே?

எல்லா உயிரினங்களும் மனிதனின் நன்மைக்காகப் படைக்கப்பட்டன என்பது இஸ்லாத்தின் கொள்கை. மனிதனுக்குக் கேடுதரும் உயிர்களை அழிக்கலாம். அதை உண்பதால் மனிதனுக்கு நன்மை என்றால் அப்போதும் அழிக்கலாம் என்று இஸ்லாம் தெளிவாக அறிவிக்கிறது.

ஆனால் இஸ்லாம் தவிர உலகில் மற்ற சித்தாந்தத்தைப் பின்பற்றுவோர் அறிவிக்காமல் அதே வதையைச் செய்து வருகின்றனர்.
மனிதனின் நன்மைக்காக மற்ற உயிர்களை அழிக்கலாம் என்று பகிரங்கமாக அறிவிப்பதில் மட்டும் தான் இஸ்லாத்திற்கும், மற்ற சித்தாந்தத்துக்கும் வேறுபாடு இருக்கிறது. உயிரினங்களை வதைப்பதில் அல்ல.

* கொசு, மூட்டைப்பூச்சி ஆகியவை கடிக்கின்றன என்பதற்காக அதற்கு மரண தண்டனை கொடுக்கப்படுகிறது. கடித்ததற்கு மரண தண்டனை என்பது வதையில்லையா?
* நமது உணவுகளை உண்டு விடுகிறது என்பதற்காக எலிகளைக் கொல்வது வதையில்லையா?
* நமக்கு வயிற்று உபாதை தருகிறது என்பதற்காக தண்ணீரில் உள்ள உயிர்களை தண்ணீரைக் கொதிக்க வைத்துக் கொல்வது வதையல்லவா?
* கன்றுக் குட்டிக்காக சுரக்கும் பாலை வாயில்லா ஜீவனை ஏமாற்றி அருந்துவது வதையல்லவா?
* வண்டிகளிலும், ஏர்களிலும் பூட்டி மாடுகளை வதைப்பது ஜீவ காருண்யமாகுமா?
* மருத்துவப் பரிசோதனைக்காக எத்தனையோ உயிர்கள் அறுத்துக் கொல்லப்படுகிறது. மனிதன் ஆரோக்கியமாக இருப்பதற்காக மற்ற உயிர்களை அறுத்துச் சோதிப்பதும் வதையல்லவா?
* நாய் கடித்து விட்டால் அதற்கு போடப்படும் ஊசி மருந்து எத்தனை உயிர்களைக் கொன்று தயாரிக்கப்படுகிறது?
* தாவரங்களுக்குக் கூட உயிர் இருக்கிறது. அதனால் தான் அவை வளர்கின்றன; காய்க்கின்றன; பூக்கின்றன; இனவிருத்தி செய்கின்றன. அவற்றை அழித்து உண்பது வதையல்லவா?

இவ்வாறு செய்பவர்கள் வதை கூடாது என்று கூறிக் கொண்டு வதைக்கின்றனர். தமக்குத் தாமே முரண்படுகின்றனர்.
ஆனால் இஸ்லாம் எவ்வித முரண்பாடும் இல்லாமல் தெளிவாக அறிவித்துவிட்டு ""உனக்குப் பயன் இருந்தால் மட்டும் மற்ற உயிர்களைப் பயன்படுத்திக் கொள்'' என்று கூறுகிறது. வித்தியாசம் அவ்வளவு தான்.